Saturday, 18 May 2013

கசப்பான வைராக்கியம்...


ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கும் யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும், எச்சரிக்கையாயிருங்கள். - (எபிரேயர் 12:15).

கி.பி 1592-1598 வரை ஜப்பானியர்கள் கொரியா தேசத்தை கைப்பற்றி அதில் ஊடுருவி இருந்தார்கள். மற்ற எல்லாரை பார்க்கிலும் ஜப்பானியர் கொரியர்களிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டார்கள். விசேஷமாக பெண்களையும்;, சிறு குழந்தைகளையும் அவர்கள் நடத்திய விதம் மிகவும் கொடுமையானது. இன்றளவும் அந்த காயங்களை மனதில் சுமந்தபடி வாழுகின்ற கொரியர்கள் உள்ளனர்.


ஜப்பானியர்கள் கொரியாவை கைபற்றியவுடன் முதலில் செய்த காரியம், அங்கிருந்த தேவாலயங்களை இழுத்து மூடியதுதான். மற்றும் வெளிநாட்டிலிருந்து வந்த மிஷனெரிகளை உள்ளே அனுமதிக்க மறுத்தனர். ஞாயிற்று கிழமைகளில் ஆராதனைகளை முழுவதும் நிறுத்திய ஜப்பானியர், முக்கியமான போதகர்களை சிறையில் அடைத்தனர். அதில் ஒரு போதகர் மாத்திரம் தான் இருந்த இடத்தின் காவல் துறை அதிகாரியிடம் அடிக்கடி போய், தன் சபையை ஒரு ஞாயிறு ஆராதனையை மாத்திரம் அனுமதிக்கும்படி கேட்டு கொண்டே இருந்தார். அவருடைய தொல்லையை பொறுக்காமல், அந்த அதிகாரி ஒரு ஞாயிறு ஆராதனைக்கு அனுமதித்தார். உடனே வேகமாக செய்தி பரவியது. இதுவரை ஆராதனைக்கு செல்ல முடியாமல் இருந்த கிறிஸ்தவர்கள், அனுமதி கிடைத்தவுடன், சூரியன் உதிக்குமுன், குடும்பமாக ஆலயத்திற்கு சென்று, காத்திருந்து, நேரமான உடன், கதவுகளை அடைத்து கர்த்தரை ஆராதிக்க ஆரம்பித்தனர்.

கொரிய சபை மக்கள் மிகவும் அழகாக பாடுபவர்கள். அவர்களின் பாடல் சத்தம் மூடியிருந்த கதவுகளையும் மீறி வெளியே அழகாக ரீங்காரமிட ஆரம்பித்தது. அவர்கள் உம்மண்டை கர்த்தரே என்னும் பாடலை பாட ஆரம்பித்தபோது, வெளியே இருந்த ஜப்பானிய அதிகாரி ஒருவன் தன் படைக்கு உத்தரவிட ஆரம்பித்தான். ஆலயத்தின் பின்புறம் இருந்தவர்கள், கதவுகள் திறக்கப்படும் சத்தத்தை கேட்டார்கள். ஆனால் அவர்கள் ஒருவரும் அறியவில்லை, அந்த ஆலயம் முழுவதும் மண்ணெண்ணையால் ஜப்பானியர் முழுக்கி கொண்டிருக்கிறார்கள் என்று. பின் அதன் மேல் நெருப்பை வீசி, புகை வர ஆரம்பித்த போதுதான், உள்ளே இருப்பவர்களுக்கு தங்கள் ஆலயம் நெருப்பு வைக்கப்பட்டிருக்கிறது என்று தெரிய வந்தது. உடனே உள்ளே இருந்தவர்கள் ஜன்னலின் வழியாக தப்பும்படி வெளியே போக துடித்த போது, வெளியே இருந்த ராணுவத்தினரின் துப்பாக்கி குண்டுகள் அவர்கள் மேல் பாய்ந்தது.

போதகருக்கு தெரிந்தது, தனக்கும் தன் சபையினருக்கும் இதிலிருந்து தப்பிக்க முடியாது என்று. வெளியே கொரியர்கள் தங்கள் மக்களுக்கு நடந்து கொண்டிருக்கும் அநீதியை கண்டு கொண்டிருக்க, போதகர், இந்த பாடல் வரிகளை பாட ஆரம்பித்தார், உடனே சபையாரும் அவருடன் இணைந்து, தங்கள் கண்களுக்கு முன் நெருப்பு கொழுந்து விட்டு எரிய தங்கள் கூரைகீழே விழுந்து அனைவரும் மடிவதற்கு முன் பாடினார்கள், But drops of grief can ne'er repay the debt of love I owe: Here, Lord, I give myself away 'Tis all that I can do! At the cross, at the cross Where I first saw the light, And the burden of my heart rolled away -- It was there by faith I received my sight, And now I am happy all the day.  அவர்கள் பாடியதை வெளியே இருந்த ஜப்பானியரும், கொரியர்களும் கேட்டு கொண்டிருந்தார்கள். அவர்கள் பாடியபடியே மறுமைக்கு கடந்து சென்றார்கள்.

எரிந்து போனவர்களின் சடலங்களை எடுத்து சுத்தம் பண்ணுவது எளிது, ஆனால் உள்ளத்தில் எரிந்து கொண்டிருந்த வேதனையையும், வெறுப்பையும் எடுத்து விடுவது எளிதல்ல. அதுவும் மரித்தவர்களின் உறவினர்கள் ஜப்பானியரின் மீது கொண்டிருந்த வெறுப்பு அதை அணைப்பது என்பது மிகவும் அரிதானதாக மாறியது.

வருடங்கள் கடந்தன. கிறிஸ்தவர்க்ள எரிக்கப்பட்ட இடத்தில் ஒரு ஞாபகார்த்த மண்டபம் கட்டப்பட்டது.அதை காணும்போதெல்லாம் கொரியர்களின் உள்ளங்களில் ஜப்பானியர்களின் மேல் வெறுப்பு அதிகமாய் கொழுந்து விட்டு எரிந்தது. கிறிஸ்தவர்களாயிருந்தாலும், உலகம் தரக்கூடாத சமாதானத்தை கொடுக்கும் கிறிஸ்துவின் சமாதானம் அவர்களது உள்ளத்திலிருந்த வெறுப்பினால் மறைந்து போயிருந்தது. ஆனால் அது அப்படியே இருக்கவில்லை.

1972ம் வருடம் ஜப்பானிலிருந்து ஒரு போதக குழு கொரியாவிற்கு வந்தார்கள். அவர்கள் அந்த ஞாபகார்த்த மண்டபத்திற்கு வந்த போது, தங்கள் மூதாதையர் செய்த குற்றத்தை கண்டார்கள். அவர்களுக்கும் அந்த செய்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்றாலும், தங்கள் நாடு தப்பிதம் செய்து விட்டது என்ற குற்ற உணர்ச்சியுடன், தங்கள் நாட்டிற்கு திரும்பி சென்று, தங்கள் கூட இருக்கும் விசுவாசிகளிடம் நடந்த விஷயங்களை கூறி, பணம் சேகரித்து, திரும்ப வந்து, கிறிஸ்தவர்கள் எரிக்கப்பட்ட இடத்தில் ஒரு அழகான ஆலயத்தை கட்டினார்கள். அது திறக்கப்படும் நாளிலே அனைவரும் கூடி, அந்த ஆலயத்தை கர்த்தருக்கு அர்ப்பணித்து, ஆராதனை முடியும் தருவாயில், ஒருவர் எழுந்து, அந்த எரிந்து போன கிறிஸ்தவர்கள் பாடிய இரண்டு பாடல்களையும் மீண்டும் பாடுவது, அவர்களை நினைவு கூருவது போலிருக்கும் என்று கூற, உம்மண்டை கர்த்தரே நான் சேரட்டும் என பாடலை பாட  ஆரம்பித்தார்கள். பாடி முடித்து, சிலுவையண்டையில் நம்பி வந்து நிற்கையில்   (At the cross at the cross where I first saw the light) என்ற பாடலை பாடும்போது, ஜப்பானிய போதகர்களின் கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது. அவர்கள் தங்கள் கொரிய நண்பர்களின் கரங்களை பிடித்து கொண்டு, கண்ணீரோடு தங்களை மன்னிக்குமாறு கெஞ்ச ஆரம்பித்தார்கள். கொரியர்களின் இருதயம் கரையவில்லை, ஆனாலும் விடாமல் ஜப்பானியர்கள் கேட்டு கொண்டிருந்தபோது, அந்த பாடலின் அர்த்தத்தை அவர்கள் கேட்டு கொண்டிருந்தபோதுதானே, கர்த்தர் கொரியர்களின் இருதயத்தில் கிரியை செய்ய ஆரம்பித்தார். ஒரு கொரிய சகோதரன், ஜப்பானிய சகோதரனின் கரங்களை பிடித்தார். அதை கண்ட மற்றவர்களும் ஒருவரை யொருவர் கட்டிபிடித்து கொண்டு கதற ஆரம்பித்தனர். அத்தனை நூற்றாண்டுகளாக இருந்த பகைமை மறைந்து கிறிஸ்துவின் அன்பு பெருக்கெடுக்க ஆரம்பித்தது. ஜப்பானியரின் மன்னிப்பின் கண்ணீரும், கொரியர்களின் மன்னித்ததன் கண்ணீரும் கலந்து, அந்த இடம் முழுவதும் தேவ பிரசன்னத்தால் நிரம்பியது.

பிரியமானவர்களே, நாமும் யார் மேலாவது, கசப்பையும் விரோதத்தையும் வைத்து கொண்டிருக்கிறோமா? கிறிஸ்துவின் சிலுவை அன்பு நம்மிலும் கடந்து வரட்டும். மற்றவர்களின் குறைகளை நாம் மன்னிப்போம். கிறிஸ்து எந்த தவறும் செய்யாதிருந்தும் அவரை சிலுவையில் அறைந்தவர்களை பார்த்து, பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்று சிலுவையில் இருந்தபடியே வேண்டினாரே, கிறிஸ்தவர்கள் என்று சொல்லி கொள்கிற நாமும் அவருடைய அடிச்சுவடிகளில் நடக்க வேண்டாமா? கசப்பான வேர் நமக்குள் முளைத்தெழும்ப வேண்டாம், கர்த்தருடைய கிருபையை நாம் இழக்க வேண்டாம். எத்தனையோ வருடங்கள் கழித்து, ஜப்பானியர்கள் மேல் இருந்த வெறுப்பை கொரியர்கள் மன்னித்தார்களே, சாத்தான் அந்த இடத்தில் தோற்று போனானே, நாமும் சத்துரு வெட்கப்படும்படியாக, மற்றவர்களை மன்னித்து, கர்த்தருக்கு மகிமை கொண்டுவருவோமா?

Alas! and did my Savior bleed
And did my Sovereign die?
Would He devote that sacred head
For sinners such as I?

At the cross, at the cross where I first saw the light,
And the burden of my heart rolled away,
It was there by faith I received my sight,
And now I am happy all the day!

Thy body slain, sweet Jesus, Thine
And bathed in its own blood
While the firm mark of wrath divine,
His Soul in anguish stood.

But drops of grief can ne’er repay
The debt of love I owe:
Here, Lord, I give myself away,
’Tis all that I can do.

Tuesday, 30 April 2013

உண்மையான வேலை..

எதைச் செய்தாலும் அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல் கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள். - (கொலோசேயர் 3:24).

குறிப்பிட்ட கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு மிக குறைவான சம்பளமே வழங்கப்பட்டு வந்தது. அதிக சம்பளம் வழங்கினாலும் அதற்கேற்ப நேர்மையாக யாரும் உழைப்பதில்லை எனபது அந்த கம்பெனி முதலாளியின் நியாயம். ஒரு முறை அங்கு சாதாரண சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்த ஒருவன், குறைவான சம்பளத்தை குறித்து கவலைப்படாமல் தன்னுடைய முழு பலத்தையும், உழைப்பையும் பயன்படுத்தி, கடுமையாக வேலை செய்தான். அவனுடைய கடுமையான வேலையை கண்டு பிற தொழிலாளர்கள், 'வீணாக நீ இப்படி கடினமாக உழைக்காதே. நீ எப்படி உழைத்தாலும் இந்த கம்பெனி முதலாளி அதை பார்த்து நல்ல சம்பளம் தர மாட்டார்' எனக் கூறினர்.


அதற்கு அந்த மனிதன், 'நான் இந்த முதலாளியிடம் நல்ல சம்பளத்தை எதிர்பார்த்து நேர்மையாக உழைக்கவில்லை. இந்த முதலாளி எனக்கு சம்பளம் குறைவாக தந்தாலும் என்னுடைய பெரிய முதலாளியாகிய தேவன் நியாயமான சம்பளம் தருவார் என்பதே என நம்பிக்கை. அவருக்காகவே நான் உண்மையாய் உழைக்கிறேன்' என்றான்.

ஆம், இவ்வுலகிலே நம் முதலாளிகள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும், அதாவது விசுவாசியானாலும், அவிசுவாசியானாலும் அவர்களுக்கு கீழ்ப்படிந்து உண்மையாய் உழைக்க வேண்டும். உதாரணமாக வேதத்திலே தானியேல், யோசேப்பு போன்ற வாலிபர்கள் புறஜாதியான ராஜாக்களிடத்தில் பணி புரிந்தாலும் தங்கள் பணியில் உண்மையோடும் உத்தமத்தோடும் இருந்தனர். அதோடு தேவனை பிரியப்படுத்தும் காரியங்களில் மிக ஜாக்கிரதையாக இருந்ததால் தேவன் அவர்களை மிக உயர்ந்த பதவியில் அமர்த்தினார். நீங்கள் பணி புரியும் வேலை ஸ்தலத்திலே உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலை மிக சிறியதாக இருக்கலாம். பிறரால் அற்பமாக எண்ணப்படுகிற வேலையாயிருக்கலாம். ஆனாலும் அதை முழு ஈடுபாட்டொடும், உண்மையோடும் செய்யுங்கள். அதை உயர் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் போனாலும், மதிக்காமல் போனாலும் தேவன் உங்களை நிச்சயமாய் கனம் பண்ணுவார்.

உங்கள் அலுவலகத்திலோ, நீங்க வேலை செய்யும் இடத்திலோ உங்களது நடவடிக்கைகளை கண்காணிக்க யாரும் இல்லாதிருக்கலாம், இருப்பினும் உங்கள் பணியினை மிக உண்மையோடும், உத்தமத்தோடும் செய்யுங்கள். ஏனென்றால் உங்கள் செயலை மட்டுமல்ல, இருதயத்தையும் காணும் உயர்ந்த அதிகாரி இயேசு உண்டு. அவர் சிறு வேலையில் உங்கள் உண்மையை கண்டு, உங்களை அநேகத்;தின் மேல் அதிபதி ஆக்குவார்.

பிரியமானவர்களே, இதுவரை நீங்கள் உண்மையும் உத்தமுமாய் உங்கள் கடமைகளை செய்த போதிலும் இதுவரை எந்த நன்மையும் அடையாமல் இருக்கலாம். ஆயினும் சோர்ந்து போகாதிருங்கள். நமது நோகக்மெல்லாம் மனிதர்களிடமிருந்து நன்மைகளை பெறுவதில் மட்டுமே இருக்க கூடாது. நன்மைகளை தேவனிடமிருந்தே எதிர்பாருங்கள். தேவன் பலன் தருவார். ஆகவே நீங்கள் செய்யும் எந்த வேலையையும் மனிதருக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய் செய்யுங்கள். அது வீட்டு வேலையோ, பள்ளி வேலையோ, அரசு வேலையோ எதுவாயிருந்தாலும் வேலையின் தரத்தையல்ல, உண்மையையே தேவன் பார்க்கிறார். அந்த உண்மையை இறுதிவரை காத்து ஆசீர்வாதத்தை பெற்று கொள்வோமாக! ஆமென் அல்லேலூயா!

Sunday, 14 April 2013

ஏதடா ஜெயம்?

யாருக்கு சவால் யார் விடுவது?
பார் போற்றும் பாமனுக்கு-ஜஸ்ட்
ஒரு பாதாளம் போட்டியா?

பாவமும் பரிசுத்தமும் நம் பட்டயத்திலா?
அதுவும் பந்தயத்திலா?
ஒளியும் இருளும் ஒன்றை ஒன்று முத்தமிடாமல்
கொஞ்சம் எட்டியே நிற்கின்றது.
சித்திரம் என்றால் என்ன
சின்னப் பிள்ளைத்தனமா?
பரமனைப் பற்றிய கரம் பற்றி எரிய வேண்டாமா?

தோல்வி காணா வேந்தன் முகம்பார்த்துப்
போட்டியிட – உனக்கு எப்படி வந்தது இந்தத்துணிச்சல்?
ஆதாமும் ஏவாழும் பழத்தைத் - திருடி
ஊண்டதால் வந்ததோ- உனக்கு
இந்தத் துணிச்சல்
யோர்தான், செங்கடல், ஏன்- எரிகோவும் கூட
காட்டியதே கர்த்தர் கரப்பலத்தை கண்டுமா- உனக்கு 
இந்தத் -துணிச்சல்

கல்லை அப்பமாக்கும் கதை பேசும் போது- நீ
காணவில்லையா?  கர்த்தர் அக்கினி கரத்தை- அவர்
கண் நோக்கி உன் பலம் காட்ட-எப்படி
வரக்கூடும் இந்தத் துணிச்சல்
நானும் என் வீட்டாரும் பாவப் பாதையில்
பயணம் செய்ததால் - உன்
பார்வைக்கு வந்ததோ இந்தத் துணிச்சல்

வாலிபம் எல்லாம் யோசேப்பாய்- மாறினால்
பலம் பெற்று விடும் நம் தேவகரம்
வயோதிபம் எல்லாம் யோபுவாய் - மாறினால்
திடன் பெற்றுவிடும் நம் நேச கரம்
பொல்லாத சாத்தான்  போட்டி
போடத் துணிந்தது பாவத்தை- நான்
பாலாய் பருகுவதால் தானே
பொல்லாங்கன் போதகரைப் போட்டி- போட
அழைத்தது நான் பாவப் பாசியில்- தினமும்
சறுக்கி விழுவதாலல்லோ
விழுவான் எழுவான் அவன்தான் நீதிமான்- கர்த்தர்
அவன் கரம் பிடித்திருக்க திருட்டுச்- சாத்தானே
உனக்கு ஏதடா ஜெயம்

                                                                                                                                                        டக்ளஸ் அமுதா
கிழக்கிழங்கை சுவிஷேசபணி,
திருப்பெருந்துறை,
மட்டக்களப்பு.

Friday, 29 March 2013

இயேசுகிறிஸ்துவின் சிலுவை பாதையும் பாடுகளும் ....

அப்பொழுது அவரைச் சிலுவையில் அறையும்படிக்கு அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்தான். அவர்கள் இயேசுவைப் பிடித்துக்கொண்டுபோனார்கள். அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு, எபிரெயு பாஷையிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப்போனார்கள். அங்கே அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்; அவரோடேகூட வேறிரண்டுபேரை இரண்டுபக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாகச் சிலுவைகளில் அறைந்தார்கள். - (யோவான் 19:16-18).30.3.13
.
பிரதான ஆசாரியனாகிய காய்பாவின் வீட்டிலிருந்து பிலாத்துவின் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்ட இயேசுகிறிஸ்து அங்கு நியாயம் விசாரிக்கப்படுகிறார். பிலாத்து அவரிடம் குற்றம் ஒன்றையும் காணாமல் அவரை விடுதலையாக்க தீர்மானித்த பொது யூதர்கள் அவரை சிலுவையில் அறைய சொல்லி சத்தமிட்டபடியால், அவரை சிலுவையில் அறையும்படிக்கு அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்தான். எருசலேமில் இயேசு கிறிஸ்து சிலுவை சுமந்த பாதை 14 நிலையங்களாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. இது சிலுவை பாதை அல்லது Via Dolorosa என்றழைக்கப்படுகிறது.
.1. பிலாத்து இயேசுவை சிலுவையில் அறைய ஒப்புக்கொடுத்தல். (யோவான்
19:16). இப்போது பிலாத்துவின் அரண்மனையில் அரபிய பெண்களுக்கு
பாடம் சொல்லி கொடுக்கும் இடமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கிருந்து
முதலாம நிலையம் ஆரம்பிக்கப்படுகிறது.
.2. இயேசுவின் மேல் சிலுவை சுமத்தப்படுகிறது. இங்கு ரோம போர்ச்சேவகர்,அவரை வாரினால் அடிப்பித்து, முள்ளுகளினால் ஒரு முடியை உண்டு பண்ணி, அவர் சிரசின்மேல் வைத்து, விசப்பான அங்கியை உடுத்திய இடம் (யோவான் 19:1-2).
3. இயேசுகிறிஸ்து முதன் முறையாக சிலுவையின் பாரம் தாங்காமல் கீழே விழுகிறார்..
4. இயேசுகிறிஸ்துவின் தாயாகிய மரியாள் தன் மகன் சிலுவை சுமந்து
செல்வதை காண்கிற இடம். இதில் ஒரு சிறிய ஆலயத்தை
கட்டியிருக்கிறார்கள்.
.5. சிரேனே ஊரானாகிய சீமோனை சிலுவையை சுமந்து கொண்டு வரும்படி அதை அவன் மேல் வைத்தார்கள் (லூக்கா 23:26)..
6. வெரோனிக்கா என்னும் சகோதரி இயேசுவின் முகத்தை தன்னிடம் இருந்த துணியால் துடைத்த இடம். அந்த துணியில் இயேசுவின் முகம்
பதிந்திருப்பதாக கூறப்படுகிறது..
7. இயேசுகிறிஸ்து இரண்டாம் முறையாக கீழே விழுகிறார்..
8. எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல்,
உங்களுக்காகவும், உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள் என்று
இயேசுகிறிஸ்து சொன்ன இடம். (லூக்கா 23:27-31).
.9. இயேசுகிறிஸ்து மூன்றாம் முறையாக கீழே விழுகிறார்.
.மேற்கண்ட ஒன்பது நிலையங்களும் சந்தடி நிறைந்த பாலஸ்தீனியரின்
கடைவீதிகளுக்கு நடுவே இருக்கிறது..
10-14 நிலையங்கள் Holy Sepulchre என்னும் பெரிய ஆலயத்தின் உள்ளே
அமைந்துள்ளது..
10. இயேசுகிறிஸ்து உடுத்தியிருந்த துணி உரியப்படுகிறது.
.11. இயேசுகிறிஸ்து சிலுவையில் ஆணிகளால் கடாவப்படுகிறார்..
12. இயேசுகிறிஸ்து சிலுவையில் தொங்கி மரிக்கிறார். இயேசுகிறிஸ்து
சிலுவையில் தொங்கி இருந்த கொல்கதா மலையின் பெரிய கற்பாறை ஒரு பெரிய கண்ணாடியில் மூடப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. பக்கத்தில் இயேசுகிறிஸ்துவின் தாயார் மரியாளின் இருதயத்தை ஒரு பட்டயம் ஊடுருவி இருப்பதைப் போன்று சிலையில் வடிக்கப்பட்டிருக்கிறது. இயேசுகிறிஸ்து சிலுவையில் தொங்குவதை போன்று பிரத்யேகமாக செய்திருக்கிறார்கள்..
13. இயேசுவின் சரீரம் சிலுவையிலிருந்து இறக்கப்படுகிறது. யோசேப்பு
அந்த சரீரத்தை பிலாத்துவினிடத்தில் கேட்டு பெற்று கொள்கிறான்
(யோவான் 19:38). இவை அங்கு படங்களாக சித்திரிக்கப்பட்டுள்ளன. அந்த படத்தில் சிறு சிறு தூதர்களும் தங்கள் கண்களை ஒரு துணியால்
துடைத்தபடி பறந்து செல்லும் காட்சி மனதை உருக்க வைக்கும். அங்கு
பக்கத்திலேயே நிக்கோதேமு வெள்ளைப்போளமும் கரிய போளமும் கலந்து, இயேசுகிறிஸ்துவின் சரீரத்தை சுகந்த வர்க்கங்களுடனே சீலைகளில் சுற்றி கட்டின இடம் உள்ளது (யோவான் 19:40).
14. இயேசுகிறிஸ்துவின் சரீரம் ஒரு புதிய கல்லறையில் வைக்கப்படுகிறது. -
(யோவான் 19:41)..
இந்த 14 நிலையங்களையும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் மதியம் மூன்று மணிக்கு Franciscans எனப்படும் கிறிஸ்தவர்கள் ஊர்வலமாக வருகிறார்கள். இயேசுகிறிஸ்து கூறின ஏழு வார்த்தைகளும் இந்த 14 நிலையங்களில் அடங்கி விடுகிறது. இந்த சிலுவை பாதை சரியானது அல்ல, மற்ற ஒரு பாதை உண்டு என்றும் கூறப்படுகிறது. எது எப்படியாயிருந்தாலும், இயேசுகிறிஸ்து சிலுவையை சுமந்து சென்றது உண்மை, அவர் கொல்கதா மலையில் சிலுவையில் அறையப்பட்டது உண்மை, அவருடைய பாடுகள் அத்தனையும் உண்மை!
தம் ஜீவனை அந்த கொடிய குரிசில் பிதாவினிடம் அர்ப்பணித்து மரித்ததும் உண்மை, அப்படியே மூன்றாம் உயிரோடெழுந்ததும் உண்மை! ஆமென் அல்லேலூயா!..

Saturday, 16 March 2013

கண்ணீரை காண்கின்ற தேவன் .....

என் அலைச்சல்களை தேவரீர் எண்ணியிருக்கிறீர்; என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்; அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது?. (சங்கீதம் 56:8).

இந்த வசனம் தாவீதினால், கிறிஸ்து பிறப்பதற்கு முன் 1,020 வருடங்களுக்கு முன் எழுதப்பட்டதாகும். அந்நாட்களில் மத்திய கிழக்கு பகுதிகளில், ஒரு போர்வீரன் போருக்கு போவதற்கு முன், தன் மனைவி அல்லது தன் தாயிடம் ஒரு கண்ணீர் பாட்டிலை வாங்கி கொடுப்பான். அந்த கண்ணீர் பாட்டில் கண்ணீரின் வடிவிலே இருக்கும். அதன் மூடி ஒரு விசேஷித்த கார்க்கினால் மூடப்பட்டிருக்கும். அதனால் அதனுள் உள்ள கண்ணீர் ஆவியாக போகாது. அதை வாங்கும் தாயோ, மனைவியோ, அந்த போர் வீரனிடம், ‘நீ போவது எனக்கு மிகுந்த வேதனையை தருகிறது. நீ வரும்வரை நான் உன்னை நினைத்து கண்ணீர் வடித்து கொண்டிருப்பேன். இரவெல்லாம் நான் வடிக்கும் கண்ணீரை இந்த பாட்டிலில் சேர்த்து வைத்து நீ வரும்போது, நீ எனக்கு எவ்வளவு விசேஷித்தவன் என்பதை வெளிப்படுத்தும் வகையில் உனக்கு பரிசளிப்பேன்’ என்று சொல்வார்களாம்.

கி.பி. 100 ம் வருடத்தில், எகிப்தில் உள்ள பார்வோனின் கல்லறையில் நிறைய கண்ணீர் பாட்டில்களை கண்டெடுத்தனர். அவைகள் அந்த பார்வோனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வைக்கப்பட்டிருந்தன.

அமெரிக்காவில் ஒருமுறை உள்நாட்டு கலவரம் வெடித்தபோது, அநேக போர்வீரர்கள் மரித்தனர். அவர்களுடைய விதவைகள், முதலாம் வருடத்தில் அவர்களின் இறந்த நாளில் கல்லறைகளுக்கு சென்று, அந்த கண்ணீர் பாட்டிலில் உள்ள கண்ணீரை தெளித்து, அந்த முதலாம் நினைவு நாளை கொண்டாடினார்கள். இன்று வரை துக்கத்தில் இருப்பவர்களுக்கு பரிசாக வெளிநாடுகளில் சில இடங்களில் கண்ணீர் பாட்டில்களை கொடுக்கிறார்கள். இப்படத்தில் இருப்பதைப் போன்ற கண்ணீர் பாட்டில்கள் விற்கப்படுகின்றன.

இந்த கண்ணீர் பாட்டில்கள் நம்வேதத்திலும் எழுதப்பட்டிருப்பது எத்தனை ஆச்சரியம்! நம் தேவன் நம் கண்ணீரை கண்டு சும்மா போய் விடுகிறவரல்ல. நம்முடைய கண்ணீர்கள் ஒரு துருத்தியில் சேர்த்து வைக்கப்பட்டிருக்கினறன. நம்முடைய வேதனைகள், பாடுகள், துக்கங்கள் எல்லாவற்றையும் அறிந்த தேவன் ஒருவர் உண்டு. அவருடைய துருத்தியில் நம் கண்ணீர் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது. என் கண்ணீரை காண்கிறவர்கள் யாரும் இல்லை, என் துக்கங்களை காண்கிறவர்கள் யாரும் இல்லை, என் தலையணையை நான் கண்ணீரால் நனைக்கிறேன் என்று சொல்கிறீர்களா? உங்களை காணும் தேவன் உண்டு, உங்கள் கண்ணீரை கண்டு உங்களுக்கு விடுதலை அளிக்கும் தேவன் உண்டு. உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மைநோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார் என்று சங்கீதம் 22:24 ல் வாசிக்கிறோமே! நம்முடைய உபத்திரவத்தை பார்த்து, அதை அற்பமாய் எண்ணாமல், தம்மை நோக்கி கூப்பிடும்போது, கேட்டு பதில் கொடுக்கும் உன்னத தேவன் நம் தேவனல்லவோ!

நம் கண்ணீர் ஒரு நாளும் வீணாய்போவதில்லை. அது அவருடைய துருத்தியில் வைக்கப்பட்டிருக்கிறது. அன்று ஆகாரின் கண்ணீரை கண்ட தேவன், அவளுக்கு பதிலை கொடுத்ததினால் அல்லவா, அவள் அவருக்கு எல்ரோயி என்று பேரிட்டாள்! ஏல்ரோயி என்பதற்கு ‘என்னை காண்கின்ற தேவன்’ என்று பொருள்.

தாவீதும் அவன் மனுஷரும் அந்தப் பட்டணத்திற்கு வந்தபோது, இதோ, அது அக்கினியினால் சுட்டெரிக்கப்பட்டது என்றும், தங்கள் மனைவிகளும் தங்கள் குமாரரும் தங்கள் குமாரத்திகளும் சிறைப்பிடித்துக் கொண்டு போகப்பட்டார்கள் என்றும் கண்டார்கள். அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த ஜனங்களும் அழுகிறதற்குத் தங்களில் பெலனில்லாமல் போகுமட்டும் சத்தமிட்டு அழுதார்கள் (1 சாமுவேல் 30:3,4). தங்கள் பிள்ளைகளும் மனைவிகளும் சிறைபிடிக்கப்பட்டு போனார்கள் என்று கேள்விபட்டபோது, எந்த தகப்பனால் சும்மா இருக்க முடியும்? தாவீதும் அவனோடு இருந்த ஜனங்களும் அழுகிறதற்குத் தங்களில் பெலனில்லாமல் போகுமட்டும் சத்தமிட்டு அழுதார்களாம். அந்த அளவு இருதயபாரத்தால் அவர்கள் நிறைந்திருந்தார்கள். அப்பொழுது தாவீது கர்த்தரை நோக்கி; நான் அந்தத் தண்டைப் பின்தொடரவேண்டுமா? அதைப் பிடிப்பேனா என்று கேட்டான். அதற்கு அவர்: அதைப் பின்தொடர்; அதை நீ பிடித்து, சகலத்தையும் திருப்பிக் கொள்வாய் என்றார். அதன்படியே அவர்கள் அந்த தண்டை பின்தொடர்ந்த போது, அவர்களுடைய பகைஞர் கொள்ளையாடிக்கொண்டுபோன எல்லாவற்றிலும், சிறியதிலும் பெரியதிலும், குமாரரிலும், குமாரத்திகளிலும் ஒன்றும் குறைபடாமல் எல்லாவற்றையும் தாவீது திருப்பிக்கொண்டான்.

ஒரு வேளை நீங்களும் பெலனில்லாமல் போகுமட்டும் அழுகிறீர்களோ? உங்கள் வாழ்க்கையில் காணப்படும் பாடுகள் நிமித்தம் யார் என்னை விடுவிப்பார் என்று கதறுகிறீர்களோ? தாவீதின் தேவன் இன்றும் மாறாதவராய் இருக்கிறார். அவர் நம் கண்ணீரை துடைக்கிற தேவன். அவரை உறுதியாய் பற்றிக் கொண்டு என்னை விடுவியும் என்று அவர் பாதத்தை பிடித்து கொண்டு விடாதிருங்கள். உங்கள் கண்ணீர் அவர் பாதத்தில் சிந்தப்படட்டும். அப்பொழுது ‘மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும்; நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்’ - (யோவன் 16:20) என்று நேற்றும் இன்றும் என்றும் மாறாத இயேசுகிறிஸ்து உங்கள் துக்கங்களை சந்தோஷமாய் மாற்றுவார். கண்ணீரை துடைத்து கொள்ளுங்கள். உங்கள் துக்கம் நிச்சயமாகவே சந்தோஷமாய் மாறும். ஆமென் அல்லேலூயா!

ஒருநாள், நாம் கர்த்தருடைய சமுகத்தில் நிற்கும்போது, நமது கண்ணீரால் நிறைந்த துருத்தியை நம்மிடம் கொண்டு வந்து நம் தேவன் காட்டுவார், ‘அருமை மகளே, மகனே, இதோ நீ சிந்திய கண்ணீர்! நான் உன்னை எவ்வளவு நேசிக்கிறேன் பார், ஒரு சொட்டையும் விடாமல் நான் சேர்த்து வைத்திருக்கிறேன்’ என்று காட்டுவார். மட்டுமல்ல, தமது புத்தகத்தை திறந்து, எதற்காக கண்ணீர் வடித்தோம் என்பதையும் தாம் எழுதியிருப்பதை நமக்கு காட்டுவார்! அல்லேலூயா!

Tuesday, 26 February 2013

எக்காள சத்தம் ....

எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம். அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக் கொள்ள வேண்டும். அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக் கொள்ளும் போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும். - (1கொரிந்தியர் 15:52-54).
.
பஞ்சு ஆலையில் ஒருவர் வேலை செய்து கொண்டிருந்தார். அவருக்கு பகல் வேலையும், இரவு வேலையும் மாறி மாறி வரும். ஓவ்வொரு முறை வேலை ஆரம்பிக்கும்போதும் அந்த ஆலையிலுள்ள சங்கு முழங்கும். சில வேளைகளில் அவர், மனைவி பிள்ளைகளோடு அயர்ந்து தூங்கி கொண்டு இருப்பார். இரவு நேர வேலைக்காக இரவு 12 மணிக்கு சங்கு ஊதும் சத்தம் கேட்டு, எழுந்திருந்து முகத்தை கழுவிவிட்டு வேலைக்கு செல்வார். அந்த வீட்டில் தூங்கும் பலர் அந்த சத்தத்ததை பொருட்படுத்துவதில்லை. அவரும் அவருடைய மனைவியும் மட்டுமே அந்த சத்தத்தை கேட்டு எழும்புவார்கள். மனைவி வேகமாக, காப்பி போட்டு கொடுக்க அவர் தன் வேலைக்கு செல்லுவார். மற்றவர்களோ அயர்ந்து தூங்கி கொண்டிருப்பார்கள்.
.
பாருங்கள், அவருக்கு மட்டும் அந்த சங்கின் சத்தம் கேட்கிறது. காரணம் அவருடைய உள்ளத்தை ஆயத்தப்படுத்தி வைத்திருந்த படியினால்தான். வேலைக்கு செல்ல வேண்டுமென்ற கடமை உணர்வு இருக்கிறபடியால் அவரால் எழுந்து விட முடிகிறது. மற்றவர்கள் அதை பொருட்படுத்தாததினால் சங்கு சத்தம் அவர்கள் காதில் விழுவதும் இல்லை, எழுந்திருப்பதும் இல்லை.
.
இதே போலதான் அநேக பரிசுத்தவான்கள் இரவிலே படுக்க போகு முன், ‘ஆவியானவரே என்னை நான்கு மணிக்கே எழுப்பும்’ என்று சொல்லிவிட்டு படுக்கைக்கு செல்கிறார்கள். எப்போது நான்கு மணியாகும்? என் நேசருடைய முகத்தை காண்பேன், மனம் திறந்து அவரிடம் பேசி உறவு கொள்வேன் என்ற ஆவலில் சரியாக நான்கு மணிக்கே எழும்பி விடுவார்கள். மற்றவர்களோ அயர்ந்து தூங்கி கொண்டிருப்பார்கள்.
.
இயேசுகிறிஸ்துவின் வருகையின் நாளில் கூட இதே காரியம்தான் சம்பவிக்க போகிறது. யாரெல்லாம் அவருடைய வருகையிலே காணப்பட வேண்டும் என்கிற ஏக்கத்தோடும் வாஞ்சையோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களோ அவர்கள் அந்த எக்காள சத்தத்தை கேட்ட உடன் அறிந்து கொள்வார்கள் இயேசுவின் வருகை வந்துவிட்டது என்று. இமைப் பொழுதில் மறுரூபமாக்கப்பட்டு ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை சந்திப்பதற்கு மத்திய ஆகாயத்திற்கு பறந்து செல்வார்கள். மற்றவர்களுக்கு அந்த சத்தம் கேட்பதும் இல்லை, அவர்கள் எதிர்கொண்டு போவதும் இல்லை.
.
ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம் என(1தெசலோனிக்கேயர் 4: 16-17) ல் பார்க்கிறோம். அப்போது அழிவுள்ள இந்த சரீரம் அழியாமையை தரித்துக் கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்படும் அல்லேலூயா! அந்த பொன்னான நாளில் நாம் மறுரூபமாக்கப்படும்படி, இப்போதே ஒவ்வொரு நாளும் கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு பரிசுத்தமாய் நம்மை காத்துக்கொள்வோம். இயேசுகிறிஸ்து சீக்கிரம் வருகிறார்! ஆமென்!
.
பிரியமானவர்களே, நமக்கு எந்த ஒரு காரியத்தில் வாஞ்சையும் தாகமும் அதிகமாக இருக்கிறதோ, அது சம்பந்தமான விஷயங்களை கேட்க நம் இருதயம் எப்போதும் விழித்தே இருக்கும். அது போல தேவன் மேல் வாஞ்சையும் தாகமும் இருக்குமானால் அவருடைய வசனத்தை கேட்க, அவருடன் உறவு கொள்ள நம் இருதயம் ஏங்கும், எப்போது அவர் வந்தாலும் அவரை சந்திக்க ஆயத்தமாயிருக்கும். ஆயத்தமாவோமா! ஆமென் அல்லேலூயா!

Friday, 22 February 2013

தவறு தவறுதான்...

ஒரு அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒரு இளைஞன் ஒருவன் திருமணமான இன்னொரு பெண்ணுடன் அடிக்கடி காணப்படுவான். திருமணமான பெண்ணுடன் இவ்விதம் அடிக்கடி சேர்ந்து காணப்படுவது தவறில்லையா? என்று ஒருவர் அவனிடம் கேட்டார். அதற்கு அந்த இளைஞன் தவறு என்பது நீங்கள் பார்க்கும் விதத்தில் தான் உள்ளது. நாங்கள் நல்ல நல்ல நண்பர்கள் அவ்வளவு தான், அதனை உங்கள் கண்கள் தவறாக பார்ப்பதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்றான்.

இன்று பல தவறான காரியங்கள் சரியான கண்ணோட்டத்துடன் பார்க்கப்படவேண்டும் என்ற சித்தாந்தம் உள்ளது. ஒரு செயல் சரியா தவறா என்பது பிறர் அதனை பார்க்கும் விதத்தில் தான் உள்ளது என்ற நியாயம் சரியானதல்ல. கறுப்பை வெள்ளை என்றும், சிவப்பை நீலம் என்றும் பார்க்க முடியாது. ஒரு ஆணும், பெண்ணும் நெருங்கிய தொடர்புகளை வைத்துக்கொண்டு இது நல்ல நட்பு மட்டும்தான் என்பது முட்டாள்தனமானது. ஆணும் பெண்ணும் நெருங்கிய நட்புகொண்டால் அது நல்ல நட்பாக தொடர முடியாது. அதோடு இன்றைய காலக்கட்டத்தில் தவறான எண்ணங்களுடன் நட்பு கொள்வது என்பது அதிகரித்த ஒன்றாகவே சமூகத்தில் காணப்படுகிறது.


இன்று நாங்கள் செய்கின்ற தவறுகளையெல்லாம் நீங்கள் தவறுகளாகப் பார்க்காமல் சரியானவைகளாகப் பாருங்கள் என்று கூறும் நிலை உள்ளது. ஆனால் ஒரு செயல் தவறா சரியா என்பதைப் பகுத்தறியும் பண்பினை தேவன் தந்திருக்கின்றார். 

நம்முடைய தவறைச் சரி என்று பார்க்க மனிதர்களை நாம் கட்டாயப்படுத்தலாம். ஆனால் உள்ளந்திரியங்களை ஆராய்ந்து பார்க்கும் தேவனை யாரும் கட்டாயப் படுத்த முடியாது. அவர் நாம் விரும்புவது போல பார்க்கமாட்டார். அவர் எது எப்படியோ அதனை அப்படியே பார்ப்பார். அவருடைய கண்களுக்கு நாம் எதையும் மறைக்க முடியாது. எனவே தவறைத் தவறு என்று உணர்ந்துகொள்ளும் நல்ல மனம் நமக்கு வேண்டும். 
"அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும்......" எபி 4:13

Sunday, 17 February 2013

ஏற்றுக் கொள்ள வேண்டுமே ...

அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார் (யோவான் 1:12).

அமெரிக்க அதிபராக திரு. ஆண்ட்ரூ ஜேக்சன் அவர்கள் இருந்தபோது, ஒரு மனிதனுக்கு அவன் செய்த குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. எந்த நாட்டிலும் ஜனாதிபதி தலையிட்டு, அவனுடைய குற்றத்தை மன்னித்தால் அது அவனுக்கு மன்னிக்கப்படும். அப்படி அதிபர் ஆண்ட்ரூ அவனுக்கு மன்னித்து மரண தண்டனையை ரத்து செய்தார். ஆனால் ஆச்சரியவிதமாக அந்த மனிதன் அந்த மன்னிப்பை நிராகரித்தான்..

நீதிமன்னறத்தில் உள்ள வக்கீல்களும், மற்றவர்களும் அவனை அந்த மன்னிப்பை ஏற்றுக்கொள்ளும்படி எத்தனையோ சொன்னாலும் அவன் உறுதியாக அந்த மன்னிப்பை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டான்..

நீதிமன்றத்தின் நீதிபதிகளும், வக்கீல்களும் அவனிடம் அந்த மன்னிப்பை ஏற்க மறுத்தால் அவனுடைய உயிர் போவது மட்டுமன்றி, அந்த மன்னிப்பை வழங்கிய ஜனாதிபதியை கேவலப்படுத்துவது போல ஆகும் என்றும் அவனிடம் கூறினர். ஆனால் அவனோ உறுதியாக மறுத்து விட்டான். ஆகவே அவர்கள் சுப்ரீம் கோர்ட்டிற்கு அதை கொண்டு சென்றனர். சுப்ரீம் கோர்ட் ஒரு மனிதன் அதை ஏற்றுக்கொண்டாலொழிய சட்டமும் எதுவும் செய்ய முடியாது என்று கூறிவிட்டது. என்ன ஒரு பரிதாபம்!. தேவனின் இரட்சிப்பும் இதுப்போன்றதுதான். பாவிகளாகிய நமக்காக தம்முடைய ஒரே பேறான குமாரனை உலகத்திற்கு அனுப்பி அவர் சிலுவையில் அறையப்பட்டு, இரத்தத்தை சிந்தியதால் உலகத்திற்கு இரட்சிப்பை தேவன் அளித்து விட்டார்.
 
யார் யார் அதை விசுவாசித்து ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களுக்கு பாவ மன்னிப்பும், இரட்சிப்பும் தேவனால் இலவசமாக கொடுக்கப்படுகிறது. எத்தனை பெரிய கிருபை!. நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் நம் பாவங்களை அறிக்கையிட்டு பாவ மன்னிப்பை பெற்று இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டாலொழிய தேவ நியாயத்தீர்ப்புக்கு யாரும் தப்ப முடியாது. 'அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று' (யோவான் 3:18) என்று வேதம் திட்டவட்டமாக கூறுகிறது.

இரட்சிப்பு கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்ல, உலகத்தில் வந்த எந்த மனிதனுக்கும் உரியது. 'அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்' (அப்போஸ்தலர் 4:12) என்று வேதம் கூறுகிறது. இப்படியிருக்க அநத நாமத்தை ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் நம்முடைய கரத்தில் தான் இருக்கிறது.


'அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்' எத்தனைப்பேர் என்று ஒரு கணக்கு இல்லை. உலகத்தின் அத்தனை ஜனங்களும் ஏற்றுக் கொண்டாலும் அத்தனைப்பேரும் தேவனுடைய பிள்ளைகளாக நிச்சயமாக முடியும். ஆனால் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைப் பேர்? இயேசுகிறிஸ்து ஒரு சாராருக்கு மட்டும்தான் வந்தார் என்று நினைத்து அவருடைய இரட்சிப்பை தள்ளிவிடுபவர்கள் எத்தனையோ கோடி கோடியான பேர்கள்! அவர் அருளும் பாவ மன்னிப்பை புறக்கணித்து தங்களுடைய வைராக்கியத்தில் வாழ்பவர்கள் கோடி கோடியானோர்!. அத்தனைப்பேரும் கர்த்தரை ஏற்றுக் கொள்ளும்படி அவர்களுக்காக மன்றாடுவோமா? கர்த்தருடைய வசனம் சொல்லப்படும்போது அவர்கள் அதை உணர்ந்து அறிந்து கொள்ளும்படி அவர்களுக்கு உணர்வுள்ள இருதயம் அருளும்படி ஜெபிப்போமா? இரட்சிப்பு இலவசம், ஆனால் அதை ஏற்றுக் கொள்பவர்களுக்கே!

Monday, 4 February 2013

இலங்கையின் சுதந்திர தினம் இன்று....

ஆசியாவின் அழகிய தேசமான இலங்கையின் 65 ஆவது சுதந்திர தினம் இன்றாகும். 1948 ஆம் ஆண்டு, மாசி மாதம், 4 ஆம் திகதி இலங்கை பிரித்தானியாவின் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றது.
 
இலங்கை தேசம் பல்லின மக்கள் வாழும் ஒரு நாடாகும். இந்த தேசத்தில் வாழும் மக்கள் ஒவ்வொருவரும் சந்தோசமாகவும், சமாதானமாகவும், ஆசீர்வாதமாகவும் வாழ கர்த்தர் தாமே கிருபை செய்வாராக. மேலும் சில ஜெப குறிப்புகள்.
  • இலங்கை பொருளாதாரத்தில் வளர.
  • சகல துறைகளிலும் பாரிய வளர்ச்சி ஏற்பட.
  • வீடுகள், காணிகள் இல்லாதோர் அவைகளை பெற்றுக் கொள்ள.
  • கஷ்டங்களோடு, கடன்களோடு, வேதனைகளோடு இருப்போர் அதிலிருந்து விடுபட.
  • பில்லி சூனியம், விக்கிரககட்டு, பாவக்கட்டு என்பவற்றிலிருந்து விடுபட.
  • இளைஞர், யுவதிகள் தொழில் வாய்ப்புகளை பெற.
  • இனங்களுக்கிடையே ஒற்றுமை உண்டாக. 
  • சிறுவர், பெண்கள் துஷ்பிரயோகங்கள் மற்றும் பாலியல் குற்றங்கள் இல்லாதொழிக்கப்பட.
  • அசுத்தமான வியாதிகளிருந்து இலங்கை குணமடைய.
  • கர்த்தருக்கு விரோதமாக எழும்பும் எல்லா காரியங்களும் வாய்க்காமல் போகவும், ஊழியங்கள் ஆசீர்வதிக்கப்படவும்.
  • கர்த்தரின் கரம் எப்போதும் இத்தேசத்தில் இருக்கவும்.
நாம் ஜெபிப்போம்....ஆமேன்.

தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார். யோவேல் 2:21

இனிக் கொடுமை உன் தேசத்திலும், அழிவும் நாசமும் உன் எல்லைகளிலும் கேட்கப்படமாட்டாது; உன் மதில்களை இரட்சிப்பென்றும், உன் வாசல்களைத் துதியென்றும் சொல்லுவாய். ஏசாயா 60:18

நீ இனிக் கைவிடப்பட்டவள் என்னப்படாமலும், உன் தேசம் இனிப் பாழான தேசமென்னப்படாமலும், நீ எப்சிபா என்றும், உன் தேசம் பியூலா என்றும் சொல்லப்படும்; கர்த்தர் உன்மேல் பிரியமாயிருக்கிறார்; உன் தேசம் வாழ்க்கைப்படும். ஏசாயா 62:4